Sunday, November 27, 2011

சுல்தான் தி வாரியர் வேறு; கோச்சடையான் வேறு! - கே எஸ் ரவிக்குமார்




Rajini and KS Ravikumar
கோச்சடையான் படம் புதிய கதை, புதிய தொழில்நுட்பத்துடன் உருவாகிறது. சுல்தான் படத்துக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் சுல்தான் - தி வாரியர் என்ற படத்தை தயாரித்து இயக்குவதாக அறிவித்தார் சௌந்தர்யா ரஜினி. அனிமேஷன் தொழில் நுட்பத்தில் அந்தப் படத்தை உருவாக்கினார். இடையில் ரஜினி எந்திரனில் நடிக்கத் தொடங்கியதால், அந்தப் படம் நிறுத்தப்பட்டது.

எந்திரன் வெளியான பிறகு சுல்தான் வரும் என்றார்கள். ஆனால் பல்வேறு தடைகளால் சுல்தான் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்ட நிலையில் ராணா படத்தை அறிவித்தார் ரஜினி.

ராணா தொடங்கிய ஏப்ரல் 29-ம் தேதியன்றே, ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த ரஜினி, ராணா படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டது. இதோ அதோ என பல தேதிகளை பத்திரிகைகள் ஹேஷ்யங்களாக வெளியிட்டு வந்தன. ஆனால் ரஜினி தரப்பில் இதுகுறித்து எதுவும் சொல்லப்பட வில்லை. வரும் ஜனவரியில் இதுகுறித்து சொல்வதாக கூறியிருந்தனர். ரஜினியும் இதை பின்னர் உறுதி செய்தார்.

இந்த நிலையில், திடீரென ரஜினியின் புதிய படம் கோச்சடையான் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் அனிமேஷனாகக் கூட இல்லாமல், ஜோம்ஸ் கேமரூனின் அவதார், ஸ்பீல்பெர்கின் டின் டின் படங்களைப் போல மோஷன் கேப்சரிங் உத்தியில் படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க 3 டி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் இந்தப் படம் முன்பு கைவிடப்பட்டதாக கூறப்பட்ட சுல்தானா என்று கேட்டபோது, இந்தப் படத்தின் இயக்குநர் மேற்பார்வை பொறுப்பை ஏற்றுள்ள ரவிக்குமார் கூறுகையில், "சுல்தான்தான் ராணா என்று முன்பு சொன்னார்கள். இரண்டு வேறு வேறு என்று முன்பு நான் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன், சுல்தானுக்கும் கோச்சடையானுக்கும் சம்பந்தமில்லை. கோச்சடையான் முற்றிலும் புதிய கதை, புதிய திரைக்கதை.

ரஜினி சார்தான் இதில் நடிக்கிறார். இதில் ஒரு ஹைடெக் செட்டுக்குள் அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்கி, அவற்றை மோஷன் கேப்சரிங் உத்தியில் மாற்றுகிறோம். அவ்வளவுதான். மற்றபடி, இது முழுக்க முழுக்க ரஜினி படம்.

ராணா ஒரு ஹெவியான படம். அதற்கு முன் இந்தப் படத்தில் நடிப்பது ரஜினிக்கு ஒரு ரிலாக்ஸான அதேநேரம் சுமையற்றதாக இருக்கும். அதனால்தான் இந்த முடிவு. ராணா நிச்சயம் 2012-ல் தொடங்கும்," என்றார்.