Monday, November 21, 2011

தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினாரா சிவக்குமார்?




பொதுமேடைகளில், குறிப்பாக இலக்கிய மேடைகளில் நடிகர் சிவகுமாரை அடிக்கடி பார்க்கலாம். அவரது பேச்சுக்கு கல்லூரி மாணவ மாணவிகளிடையிலும் பெரும் வரவேற்பு இருப்பதால், அடிக்கடி அவரை அழைத்துப் பேச வைக்கின்றனர்.

அவரது ராமாயண சொற்பொழிவு பெரிதும் ரசித்துப் பாராட்டப்பட்டது. வரலாற்று நாயகர்கள் குறித்தும் இப்போது நிறைய பேசி வருகிறார்.

பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதுபோல, அவர் எல்லா மேடைகளிலுமே சில விஷயங்களை உரிமையுடன் கூறுகிறார். அப்படி அவர் சொன்ன சில கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

இதுதொடர்பாக ஒரு இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி:

சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.

இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது.

பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.

"பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்" என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.

உங்களுடைய இந்த ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டு எந்த அளவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா? இப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா? தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று வீர வசனம் பேசும் நீங்களா இப்படி பேசுவது? குடும்பப்பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் இப்படிப்பட்ட கேவலமான செயலுக்கு அனுமதி கேட்டதை நீங்கள் காது கொடுத்து கேட்டீர்களா சிவக்குமார்?

மனைவி கணவனிடத்தில் அந்தரமாக பேசியதை எப்படி நீங்கள் உளவு பார்த்தீர்கள்? அப்படியே யாரவது ஒருத்தி உங்கள் காதுபட பேசியிருந்தால் அவள் நிச்சயம் குடும்பப் பெண்ணாக இருக்க முடியாது. அவளுக்கு அகராதியில் வேறு பெயர். ஒருவேளை சினிமாத் துறையில் நீங்கள் பழகிய பெண்கள் உங்களிடம் இவ்வாறு பேசினார்களோ?

தமிழ்ப் பெண்களை இதைவிட வேறு யாரும் கொச்சைப்படுத்தி பேச முடியாது. நடிகை குஷ்பு "தமிழ் நாட்டிலே எந்தப் பெண்களும் கற்புடையவளாக இல்லை" என்று சொன்னதற்காக தமிழகமே கொந்தளித்தது. உங்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து கேள்விக் கேட்க ஏன் இன்னும் யாருக்கும் துணிவில்லை?

தமிழகத்தில் இருக்கும் மாதர் சங்கங்களுக்கு இந்த செய்தி எட்டவில்லையா? நடிகை குஷ்பு தமிழ்ப்பெண்களை இழிவு படுத்தியபோது வரிந்துக் கட்டிக் கொண்டு வழக்குகள் தொடர்ந்த அரசியல் கட்சிகள் உங்கள் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?

சிவக்குமாரின் எண்ணங்கள் வேண்டுமானால் செத்து ஒழிந்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக இருக்கலாம். அதற்காக ஆதாரங்கள் இல்லாத, பீதி கிளப்பக்கூடிய, உண்மைக்கு புறம்பான, அருவருக்கத்தக்க விஷயங்களை மேடையில் வாதங்களாக வைப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண்கள் கல்லூரியில் நமது இலக்கியச் செல்வர் சிவக்குமார் ஆற்றிய சொற்பொழிவு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெங்களுரில் ஏதோ ஒரு கல்லூரி வளாகத்தின் உள்ளேயே PUB (ஒயின் ஷாப்) திறந்து வைத்திருக்கிறார்களாம், ஏனென்றால் கல்லூரி மாணவ மாணவிகள் வெளியில் சென்று குடித்து வந்து கல்லூரியின் பெயர் கெட்டுப் போவதால் அதைத் தடுக்கும் விதத்தில் கல்லூரி வளாகத்தினுள்ளேயே இந்த ஏற்பாடாம். ஆளாளுக்கு அவரைப் பிடித்து “அது எந்தக் கல்லூரி? பெயரைச் சொல்லுங்கள்” என்று கூச்சலிட்டு பிரச்சினை செய்ய திக்குமுக்காடிப்போய் எதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.

மேடையில் உணர்ச்சிகரமாக பேசி ‘திரில்’ ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உண்மைக்குப் புறம்பான இது போன்ற செய்திகளை அவர் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

அதே மேடையில் அவர் கூறிய இன்னொரு செய்தி. ஹைதராபாத்தில் வசிக்கின்ற காதலித்துத் திருமணம் செய்துக்கொண்ட சென்னையைச் சேர்ந்த இளந்தம்பதியரின் வாழ்க்கை முறையை விவரித்திருக்கிறார்.

கணவனுடைய நண்பனோடு மனைவியும், மனைவியின் தோழியோடு கணவனும் உறவு வைத்திருந்தார்களாம். இரு ஜோடிகளுக்கும் இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இதனைக் கண்டுக் கொள்ளாமல் பரஸ்பர உறவுகொண்டு வாழ்ந்து வருகிறார்களாம்.

இதுதான் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்களுடைய இன்றைய பரிதாப நிலைமை என்று கூறியிருக்கிறார் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "இது விதண்டாவாதம். சிவகுமார் வெறும் விளம்பரத்துக்காக பேசக்கூடிய மனிதரல்ல. அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. எப்போதும் மாணவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பவர். அவர் பேச்சு அடங்கிய முழு வீடியோவும் கடந்த 6 மாதங்களாகவே அனைத்து இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. டிவியிலும் வந்துள்ளது. அதைக் கேட்டுப் பார்த்தால், அவர் பேச்சு எந்த அளவு சரியானது என்பது புரியும்.

விமர்சகர்கள் குற்றமாகக் குறிப்பிடும் அந்தக் கருத்து சிவகுமாரின் சொந்த கருத்தல்ல. கருத்தடைச் சாதனம் பற்றி அவர் சொன்னது நாளிதழ்களில் வெளியான செய்தி. அதேபோல, அந்தக் காலத்தில் இருந்த பிரபல சினிமா கதாநாயகனுக்கு பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான மோகத்தைச் சுட்டிக்காட்டவே இந்த உதாரணத்தை அவர் சொன்னார். அதை வைத்து அவர் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அப்படிச் சொன்னார் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

காதல் திருமணங்களை அவர் பொதுவாகக் குறை சொல்லவில்லை. சமூகத்தில் ஓரிருவர் தவறிப் போய் தப்பான வழியில் செல்வதைக் குறிப்பிட்டு, மாணவிகள் எக்காரணம் கொண்டும் சறுக்கி விடக்கூடாது என்றுதான் அறிவுரை சொன்னார்.

அதைப் போய் தவறாக சித்தரித்து சர்ச்சை கிளப்புவது சரிதானா... இப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால், தமிழ் இலக்கிய மேடைகளில் ஒருவரும் பேச முடியாமல் போகும். முதலில் அவர் பேச்சை முழுமையாகக் கேட்டுவிட்டு விமர்சிக்கவும்," என்கிறது சிவகுமார் தரப்பு.