Tuesday, November 15, 2011

புதிய பெயர், புதிய கதையுடன் மீண்டும் ஆரம்பமாகும் சுல்தான்!



Rajini in Sultan
ரஜினியின் சிவாஜி - தி பாஸ் படத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம் சுல்தான் தி வாரியர். சௌந்தர்யா ரஜினி இயக்க, அவரது ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்க ரஜினியின் அனிமேஷன் படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

இந்திய நடிகர் ஒருவருக்காக அனிமேஷனில் படம் தயாராவது இதுவே முதல்முறை என்பதால் பெரும் ஆர்வம் காட்டினர் ரசிகர்கள்.

ரஜினியும் வியட்நாம், கம்போடியா என வித்தியாசமான லொகேஷன்களில் இந்தப் படத்துக்காக நடித்துக் கொடுத்தார். 

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் படம் குறித்த காலத்துக்குள் முடியவில்லை. அதற்குள் ரஜினி எந்திரனில் படுபிஸியாகிவிட்டார்.

எந்திரன் படம் வெளியான சூட்டோடு ராணாவை அறிவித்தார் ரஜினி. இந்தப் படம் சுல்தானின் மறுவடிவம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அதை சௌந்தர்யா மற்றும் ராணாவை இயக்கும் கேஎஸ் ரவிக்குமார் திட்டவட்டமாக மறுத்தனர். சுல்தான் வேறு, ராணா வேறு. ராணா வெளியான பிறகு சுல்தான் வரும் என்று இவர்கள் அறிவித்த பிறகே வதந்திகள் அடங்கின.

ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை, ஓய்வு என நாட்கள் கடந்த நிலையில், சுல்தான் வருமா வராதா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் சுல்தான் வருவது உறுதி என்று தெளிவாக அறிவித்திருந்தார் சௌந்தர்யா. இப்போது தனு ட்விட்டர் பக்கத்தில் அதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று ட்விட்டரில் (@sound_d_rajini)பதிவிட்டிருந்த செய்தியில், "எல்லோரும் எனது அடுத்த புராஜெக்டுகள் பற்றியும் அப்பா பற்றியும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்பா மிகவும் நலமாக இருக்கிறார்.

சுல்தான் எனது கனவுப் படம்.அதை உருவாக்குவதில் சில தடங்கல்கள் வந்தன, தேவையற்ற தவறான திருப்பங்கள் நேர்ந்தன. இப்போது அந்தப் படத்தை புதிய தலைப்பு மற்றும் கதையுடன் தொடங்குகிறேன்," என்று கூறியுள்ளார்.