Tuesday, November 15, 2011

இலியானாவையும் விரட்டியடித்த தெலுங்கானா போராட்டக் குழு!



Ileana
நடிகை ஸ்ரேயாவை கல்வீசி விரட்டியடித்தது போலவே, மற்றொரு முன்னணி நடிகையான இலியானாவையும் விரட்டியடித்துள்ளது தெலுங்கானா ஆர்ப்பாட்டக்காரர்கள்.

தனி தெலுங்கானா கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர் ஆந்திர மக்களில் ஒரு பகுதியினர்.

சினிமா நட்சத்திரங்களோ, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவு காட்டுகின்றனர். காரணம், இருமாநிலங்களாக ஆந்திரா பிரிந்தால், பெரிய பாதிப்பு தங்கள் தொழிலுக்கு ஏற்படும் என்பது அவர்கள் கருத்து.

சமீபத்தில் ஸ்ரேயா நடித்த தெலுங்கு படப்பிடிப்பில் தெலுங்கானா ஆதரவாளர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கானாவை வாழ்த்தி கோஷமிடும்படி ஸ்ரேயாவிடம் அவர்கள் நிர்ப்பந்தித்தனர். அவர் மறுத்தார். இதனால் கோபமடைந்து படப்பிடிப்பு கருவிகளை உடைத்தனர். ஸ்ரேயா கார் மீது கல்வீசி கண்ணாடிகளையும் உடைத்தனர். ஸ்ரேயா அங்கிருந்து பாதுகாவலர்கள் துணையோடு தப்பி ஓடினார்.

இதுபோல் இலியானா படப்பிடிப்பிலும் நேற்று தெலுங்கானா ஆதரவாளர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லுஅரவிந்த் மகன் அல்லு அர்ஜுன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் இலியானா.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள கே.பி.எச்.வி. காலனியில் நேற்று நடந்தது. இலியானா அல்லு அர்ஜுன் நடித்த காட்சிகள் படமாகிக் கொண்டு இருந்தது. அப்போது தெலுங்கானா ஆதரவாளர்கள் கும்பலாக உள்ளே புகுந்தனர். படப்பிடிப்பு நடத்த கூடாது என தகராறு செய்தார்கள். சிரஞ்சீவி ஒன்று பட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக உள்ளார். அவர் குடும்பத்தினர் நடிக்கும் படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர்.

மீறி படப்பிடிப்பை நடத்தினால் கேமராவை உடைப்போம் என மிரட்டினர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இலியானாவை பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ரகளை செய்த 10 பேரை கேபிவிஎச் காலனி போலீஸார் கைது செய்தனர்.