Sunday, November 27, 2011

கோச்சடையான் தொடங்க ரஜினியின் உடல்நலம் காரணமல்ல!! - சௌந்தர்யா




Soundarya Rajini
சென்னை: ராணாவை நிறுத்திவிட்டு கோச்சடையானை ஆரம்பிக்க, ரஜினியின் உடல்நிலை காரணமல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். இந்தப் படத்திலும் முழுமையாக அவர்தான் நடிக்கப் போகிறார், என சௌந்தர்யா ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

கோச்சடையான் என்ற புதிய படத்தை ரஜினி அறிவித்ததிலிருந்து அது தொடர்பாக பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சௌந்தர்யா கூறுகையில், "தென்கிழக்கு ஆசியாவில் மோஷன் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் ஒரு நடிகருக்கு படம் தயாராவது அப்பாவுக்குதான் (ரஜினி). கோச்சடையான் என்பது சிவபெருமானின் பெயர். இந்தப் படம் சுல்தான் அல்ல. இது முற்றிலும் புதிய படம்.

அதேநேரம் ராணா படத்தை நிறுத்தவில்லை. தள்ளி வைத்திருக்கிறோம். நிச்சயம் ஆகஸ்ட் 2012-ல் தொடங்கிவிடும்.

கோச்சடையான் வெறும் அனிமேஷன் படம் அல்ல. இந்தப் படத்தில் முழுமையாக அப்பா நடிக்கிறார். அவரது காட்சிகள் ஒரு ஸ்டுடியோவுக்குள் படமாக்கப்பட்டு, மோஷன் கேப்சரிங் முறையில் மாற்றப்படும். உடல்ரீதியாக அவர் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். கோச்சடையான் தொடங்க அவர் உடல்நலம் காரணமல்ல. இந்தப் படத்தில் நடிக்க அப்பாவே விரும்பி, ஆரம்பிக்கச் சொன்னார்.

பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்," என்றார்.