Tuesday, December 20, 2011

நடிகர் நந்தா தயாரிக்கும் 'திலீபன்': புலிகள் தலைவர் பிரபாகரன் கதையா?




Nanda and Prabhakaran
விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் கதையை திலீபன் என்ற பெயரில் படமாக்குவதாக வந்த செய்தியை மறுத்துள்ளார் நடிகர் நந்தா.

விடுதலைப் புலிகளின் போராட்டக் களத்தை பின்னணியாகக் கொண்டு வெளியான ஆணிவேர் படத்தில் நடித்ததன் மூலம் உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்றவர் நடிகர் நந்தா.

பல படங்களில் நடித்துவிட்ட நந்தா, இப்போது தயாரிப்பாளராகியுள்ளார். அடுத்து 'திலீபன்' என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறார். இதில் பிரபாகரன் கதையை படமாக்குவதாக செய்தி பரவியது. பிரபாகரன் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினைகள் பிரபாகரன், திலீபன் போராட்டங்கள் இதில் காட்சிப்படுத்தப்படுவதாக கூறினர். இதனால் உலகத் தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

ஆனால், 'திலீபன்' படம் பிரபாகரன் கதையல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார் நந்தா. அவர் கூறுகையில், "திலீபன் படத்தை நான் தயாரிப்பது உண்மைதான். ஆனால் படத்தில் எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கேரக்டரை நான் காண்பிக்கவில்லை. ஆனால் தமிழருக்கான படம் இது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஏற்கனவே 'ஆணிவேர்' படத்தில் நான் நடித்துள்ளேன். அப்படம் உலகம் முழுவதும் உள்ள தமிழர் நெஞ்சங்களில் இடம் பிடித்தது. அதே மாதிரி இப்படமும் உருவாகிறது. இதில் என்னுடன் நடிகர் பரத் முக்கிய கேரக்டரில் தோன்றுகிறார்," என்றார்.