Saturday, December 24, 2011

ராஜபாட்டை- சினிமா விமர்சனம்







ஒரு படம் வெற்றியடைந்தவுடன் அடுத்தப் படத்தின் வெற்றி தானாகவே வரும் என்று நினைப்பதுதான் பல இயக்குநர்களின் எண்ணம். சுசீந்திரனும் அதில் விதிவிலக்கல்ல..! வெண்ணிலா கபடிக் குழுவினால் அவருக்கு வாழ்க்கை கிடைத்தது. நான் மகான் அல்ல படத்தினால் ஹீரோவுடனும் ஜெயிப்பார் என்று நிரூபணமானது. அழகர்சாமியின் குதிரையில் இலக்கியமும் படைப்பார் என்றானது.. ஆனால் இந்த ராஜபாட்டையில் முழுவதுமாக சறுக்கி விழுந்திருக்கிறார்..! பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றமே கிடைத்திருக்கிறது..!

அனல் முருகன் என்ற பெயரில் சினிமாவில் வில்லன் நடிகராகப் பெயரெடுக்க நினைத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதா நடிகர் விக்ரம்..! தனது மனைவியின் பெயரில் அமைந்திருக்கும் அனாதை ஆசிரம இடத்தை எம்.எல்.ஏ. சீட்டுக்காக கேட்கும் மகனிடமிருந்து தப்பி வந்து விக்ரமிடம் அடைக்கலமாகிறார் கே.விஸ்வநாத். அந்த அனாதை ஆசிரம இடத்தை வளைக்க நினைத்து ஏமாற்றமாகிறார் அக்கா என்னும் அரசியல் வித்தகி ரங்கநாயகி.. மகனைத் தூண்டிவிட்டு தேடச் சொல்கிறார். அவரது அடியாட்களும் தேடுகிறார்கள். விஸ்வநாத் கிடைத்தாரா..? விக்ரம் விட்டாரா? என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

கதை என்னவோ தற்போதைய தமிழகத்தின் ஹாட் ஸ்டோரிதான் என்றாலும், திரைக்கதை அரதப் பழசு. 1985-1990-களில் வெளி வந்த மசாலா படங்களின் டைப்பில் திரைக்கதையை எழுதியிருக்கிறார் சுசீந்திரன். இதையெல்லாம் செய்துவிட்டு திரைக்கதை-இயக்கம் என்று தைரியமாக தன் பெயரையும் போட்டிருக்கிறார்.. ஆச்சரியமான தைரியம்தான்..!

அடுத்தடுத்து காட்சிகள் எப்படி வரும்..? என்னவாக வரும்..? வசனங்கள் என்ன..? ஹீரோ என்ன செய்வார் என்பதை முன்பேயே ஊகித்துவிடுவதால் படத்தில் மூழ்கி முத்தெடுக்க முடியவில்லை. போதாக்குறைக்கு எந்தவித்த்திலும் சேர்க்க முடியாத வெள்ளரி பிஞ்சாக ஹீரோயின்.. கோவில் இல்லை அட்லீஸ்ட் இவருக்காக போஸ்டர்கூட அடிக்க முடியாத அளவுக்கு ஒரு அழகு ஹீரோயின்..  புகைப்படங்களில் மட்டுமே அழகாக இருக்கிறார். படத்தில் செகண்ட் ஹீரோயின் லெவலில் இருக்கிறார். ஒளிப்பதிவாளருடன் ஏதாவது சண்டையோ..! இவருக்கு அப்படியே நேரெதிர், அக்காவாக நடித்திருக்கும் அரசியல் வில்லி.  குளோஸப் காட்சிகளில் குஷ்பூ போலவே இருக்கிறார்..! பேசாமல் கதையை மாற்றி ஹீரோயினுக்கு அம்மாவாகவாவது வைத்திருந்தால் ரசித்திருக்கலாமோ..?

விஸ்வநாத், விக்ரமுக்கு காதலிக்க அட்வைஸ் கொடுக்கும் காட்சிகளும், ஹீரோயினை லின்க் செய்துவிடும் காட்சிகளும் ரொம்பவே ஓவர் என்றாலும், அந்தக் காட்சிகளில் விஸ்வநாத் இல்லாமல் வேறு நபர்களை வைத்திருந்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மனதில் இருக்கும் மரியாதையை கட் செய்து காக்காய்க்கு போட முடியலை..! டூ மச்சாகவே இருந்தாலும் கொஞ்சம் ரசித்தேன்..!

மகனாக அவினாஷ்..! அப்பாவிடம் கெஞ்சப் போகிறேன் என்று சொல்லிவிட்டு நொடியில் முகத்தை மாற்றிப் பேசும் அந்த ஒரு நடிப்பு அவரது இத்தனை வருட நாடக வாழ்க்கையை பளிச்சென்று சொல்லிக் காட்டியது..! 

தெலுங்கின் மெகா வில்லனான பிரதீப் இதில் வாப்பா என்ற பெயரில் வில்லனாக உருமாறியிருக்கிறார். கதைக்கு வில்லன் தேவைதான் என்றாலும், இப்போதைய காலக்கட்டத்தில் இப்படியொரு கேரக்டர் ஸ்கெட்ச் தேவையா..? வாப்பாவின் தோழர்கள் அனைவரும் அரிவாளோடு ஓடி வந்து முருகனுடன் சண்டையிடுவதை நினைத்துப் பார்த்தால் நிஜத்தில் பகீரென்கிறது..! இதுவரையில எந்தவொரு சினிமாவிலும் இப்படி பகிரங்கமாக முருகனையும், வாப்பாவையும் மோதவிட்டதில்லை என்று நினைக்கிறேன்..! 

தசாவதாரம் படத்தின் மீது அனைத்து அரிதார நடிகர்களுக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். அதற்காக அது போன்றே அத்தனை வேடங்களையும் ஒரே படத்தில், ஒரே காட்சியில் இப்படித்தானா வைத்து ஆற்றிக் கொள்ள வேண்டும்..!? விக்ரமின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது..! 

சினிமா ஸ்டண்ட் நடிகர்கள் என்றால் அவரது நண்பர்கள் அனைவரும் வாட்டசாட்டமாக ரவுடிகளை போலவே இருப்பார்கள்.. கதைக்குப் பொருத்தமானதாக இருக்கும். திரைக்கதையில் பல்வேறு போலிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் சுசீந்திரன். பிரதீப்பை சிபிஐ, லோக்கல் போலீஸ் என்று ஆள் மாறாட்டம் செய்து விசாரிக்கும் உத்தி, முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும், விக்ரமின் பலவேஷ மேக்கப் காட்சிகள்தான் கொஞ்சம் காமெடியாகிவிட்டது..! இதனைச் செய்யாமலேயே இருந்திருக்கலாம்..!

அவனவன் வட்டிக்கு கடன் வாங்கி, அந்தக் கடன் வட்டியையே கட்ட முடியாமல், திரும்பவும் வட்டிக்கு கடன் வாங்கி.. ஒரேயொரு கையெழுத்தில் 50 வருட சம்பாத்தியத்தையே இழந்து கோடம்பாக்கத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், லட்சங்களில் செலவு செய்து வெளிநாட்டில் போய் ஷூட் செய்திருக்கும் ரீமாசென், ஷ்ரேயா, விக்ரமின் பாடல் காட்சியை இப்படியா எண்ட் டைட்டிலில் வைத்து கொடுமைப்படுத்துவது..? பாவம் தயாரிப்பாளர்.. என்றைக்காவது ஒரு நாள் இதனை நினைத்து தலையணையில் முகம் புதைத்து அழுகத்தான் போகிறார்..!

இடையிடையே நகைச்சுவை என்ற பெயரில் விஸ்வநாத்தும், தம்பி ராமையாவும், எதிரணியில் இருக்கும் 2 மொன்னை ரவுடிகளும் ரவுசு கட்டுகிறார்கள்..! இதுவே போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார்..! 

இசை யுவன்ஷங்கர்ராஜாவாம்.. அனைத்துப் பாடல்களும் யுகபாரதியாம்.. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வார்த்தைகளுக்கு மெட்டமைத்திருக்கிறார். ஆனாலும் மனதில் நிற்கவில்லை..! ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடும் அழகியைவிடவும் அதன் பாடல் வரிகள் நில்லாததுதான் கொடுமை..! 

கமர்ஷியல் படங்கள் எடுக்கலாம்தான்.. ஆனாலும் விக்ரம் போன்ற மாஸ் ஹீரோக்களை கையில் வைத்துக் கொண்டு அவர் ஏற்கெனவே நடித்த தில், தூள் வகையறாவிலேயே தோசை சுட்டால் எப்படி..? விக்ரமாவது கொஞ்சம் சுதாரித்திருக்க வேண்டாமா..? தெய்வத்திருமகளில் கிடைத்த பாராட்டுக்களில் கால்வாசிகூட இந்தப் படத்திற்காக அவருக்குக் கிடைக்கப் போவதில்லை..!

ஸாரி.. தலைவலி வரவில்லைதான்.. அதே சமயம் வீணாகிவிட்டதே என்கிற கோபமும் வருகிறது..!