Tuesday, December 20, 2011

அமலா பாலுக்கு வீடு வாங்கிக் கொடுத்தேனா... பதறும் விஜய்!




Amala Paul and A L Vijay
முல்லைப் பெரியாறு, தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்குதல், கேரளாவில் தமிழ்ப் பெண்கள் மானபங்கம் என எதைப் பற்றியுமே கவலைப்படாமல் நாளொரு கிசுகிசும் பொழுதொரு பொழுதுபோக்குமாகப் போய்க்கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம் (அம்மா சொன்னாதான் ஆவேசப்படுவாங்களாம்!).

நடக்கிற நிகழ்ச்சிகள் அனைத்திலும் சிறப்பு விருந்தினர்கள் அநேகமாக மலையாள நடிகைகள் அல்லது இயக்குநர்கள்தான்.

இப்போது கோடம்பாக்கத்தைக் கலக்கிக் கொண்டிருப்பதும் ஒரு மலையாள - தமிழ்க் காதல்தான். அது அமலா பால் - இயக்குநர் விஜய் இடையிலான நெருக்கம்.

'அமலா பாலை திருமணம் செய்யப் போகிறார் விஜய், அதற்கு பெற்றோரும் சம்மதம் சொல்லிவிட்டனர்' என்று கூறப்பட்ட நிலையில், இப்போது புதிதாக வந்துள்ள பரபரப்பு, அமலா பாலுக்கு புதிதாக வீடு வாங்கிக் கொடுத்து, சென்னையிலேயே செட்டிலாக வைத்துவிட்டார் விஜய் என்பதுதான்.

இதுகுறித்து இயக்குநர் விஜய்யிடம் கேட்ட போது, "எனக்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல் என எல்லோருமே சொல்கிறார்கள். எனக்கே அவர்கள் சொல்லித்தான் தெரிகிறது. இந்த வதந்தியால் என் குடும்பத்தினருக்கும் சங்கடம். எனக்கும், அமலா பாலுக்கும் இடையே இருப்பது வெறும் நட்புதான். வேறு மாதிரி எந்த உறவும் இல்லை.

சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதிகாலை 2.30 மணி வரை வேலை சரியாக உள்ளது. இதில் காதலுக்கு ஏது நேரம்.

நான் காதர் நவாஸ்கான் ரோட்டில் அமலாபாலுக்கு வீடு வாங்கி கொடுத்து இருப்பதாகவும், எனது பி.எம்.டபுள்யூ 5 சீரீஸ் காரை அமலாபால் உபயோகத்துக்கு கொடுத்து விட்டதாகவும் வெளியான செய்திகளிலும் உண்மை இல்லை.

நான் கஷ்டப்பட்டு உழைத்து எனது பெற்றோருக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளேன். அமலா பாலுக்கு எதற்காக வாங்கித் தரவேண்டிய நிலையில் இல்லை" என்றார்.

என்னமோ போங்க... இப்படி சொல்லும் ஜோடிகள்தான் முதலில் மாலையும் கழுத்துமாக போஸ் தருகிறார்கள்!