Sunday, December 11, 2011

ஒஸ்தி - சினிமா விமர்சனம்

View - 1



ஹிந்தி தபாங்கின் ரீமேக். எந்த லாஜிக்கும் பார்க்கவே கூடாது..! டிக்கெட் வாங்கினோமா? உள்ள போனோமா? உக்காந்தோமா? பார்த்தோமா? சிரிச்சோமா..? எந்திரிச்சு வந்தோமான்னு ஐடியா இருந்தா இந்தப் படத்துக்குப் போங்க.. அதாவது வாசல்லேயே மூளையைக் கழட்டி வைச்சிட்டு, விமர்சனத்துக்குன்னு கூட போயிராதீங்க..!


சிம்பு.. அவரோட அம்மா ரேவதி. ரேவதியோட செகண்ட் ஹஸ்பெண்ட்டு நாசர். அவங்களுக்கு பொறந்த பையன் ஜித்தன் ரமேஷ். சின்னப் புள்ளைல சிம்புவை விட்டுட்டு, ரமேஷை செல்லமா வளர்க்குறாரு நாசர். கடுப்புல கெடக்காரு சிம்பு. ஆத்தாவுக்கு பஞ்சாயத்து பண்றதே வேலையா போகுது..! உருப்பட மாட்டான்னு சொல்ற சிம்பு எப்படியோ ஷோகேஷ் பொம்மைக்கு காக்கி யூனிபார்ம் போட்டு காட்டுற மாதிரி போலீஸ் இன்ஸ்பெக்டரா ஆயிடறாரு.. நல்லா வருவான்னு நினைச்ச தம்பி ரமேஷு.. உருப்படாமலேயே போயிடறாரு.. அந்த ஊர் கெட்ட அரசியல்வியாதி சோனுசூட்டை இடைத்தேர்தல்ல ஜெயிக்க விடாமல் இருக்க அத்தனையும் செய்யறாரு சிம்பு. அவர் தம்பியை வைச்சே அவர் குடும்பத்தை உடைக்குறாரு சோனு. கடைசீல பாசம் சேர்ந்துச்சா..? பகை புட்டுக்கிச்சான்றதை உங்க மூணாவது கண்ணுல நினைச்சுப் பார்த்துக்குங்க..!

தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அண்ணன் தரணியின் ஒரு அம்சக் கொள்கை.. அதுக்காக கமர்ஷியலை விடவே கூடாதுன்னு இடுப்புல போட்டிருக்குற அண்ணாக்கயிறு மாதிரி இறுக்கமா புடிச்சிட்டே இத்தனை வருஷமா புல் ஸ்கேப்புல ஓடிக்கிட்டிருக்காரு..!

சிம்புவோட மேனரிசம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக ஸ்டைலா பேசுறேன்னு சொல்லி திருநெல்வேலி தமிழைக் கொத்துப் புரோட்டோ போட்டதுதான் தாங்க முடியலை.. எத்தனை ஏலேதான் நிமிஷத்துக்கு பேசுவாங்க.. ஒரு தபா ஆரம்பிச்சா பத்தாதா..? போதாக்குறைக்கு பில்டப் வசனங்கள் வேற..! காமெடியான கேரக்டர் ஓகேன்னாலும், டூட்டிலேயும் இதே மாதிரி காமெடியாத்தான் இருக்கணுமா? டோட்டலா அவரோட கேரக்டர் ஸ்கெட்ச்சே இதுல காமெடியாகி எதையுமே உண்மையா ரசிக்கவும் முடியலை.. இல்லைன்னும் விட முடியலை.. ரெண்டுங்கெட்டான் போலீஸா ஆயிருக்காரு சிம்பு..!

பக்கம் பக்கமா வசனம்.. நம்ம அண்ணாத்தே பரதன் எழுதியிருக்காரு. தில், தூள், கில்லி, குருவின்னு தரணியோட ஆஸ்தான வசனகர்த்தா. அழகிய தமிழ் மகன் படத்தோட இயக்குநர். அந்த ஒரு படம் ஓடலைன்னா என்ன..? இருக்கவே இருக்கு வசனகர்த்தா தொழில்ன்னு அண்ணன் இதுல அடிச்சு விளையாடிட்டாரு..! இவரோட வசனங்களை அழகா ஸ்பேஸ் விடாம எடுத்துவிட்டிருக்கிறது சந்தானம்தான்..!

அந்தக் கால கவுண்டமணியை இப்போதைக்கு கொஞ்சமா ஞாபகப்படுத்துறாரு சந்தானம். இவர் மட்டும் இல்லேன்னா தியேட்டரே ரவுசாயிருக்கும்.. படத்தையும் இவர்தான் காப்பாத்தியிருக்காருன்னு அடிச்சுச் சொல்ல்லாம்..! “ஆக்ரோஷமா பேச வேண்டிய வசனத்தை, ஆட்டுக்குட்டியை தடவிக் குடுக்குற மாதிரி பேசுறியே..” என்ற இடத்தில் உம்மனா மூஞ்சிகளும் சிரிக்கத்தான் வேண்டும்..! பீர் பாட்டிலை லுங்கில ஒளிச்சு வைக்கணும்னு சொல்ற டயலாக்கும், "கோவைப் பழம் மாதிரி ஹீரோயின், கொட்டாங்குச்சி மாதிரி ஹீரோ"ன்ற டயலாக்கும் சிரிக்க வைக்கின்றன..! எனிவே பெஸ்ட் ஆஃப் காமெடி இன் சந்தானம்ஸ் கேரியர்..! நன்றி பரதன் அண்ணா...! இருந்தாலும் அவ்வப்போது இரட்டை அர்த்த டயலாக்குகளையும் வழக்கம்போல அள்ளித் தெளித்திருக்கிறார். இதுக்காக அவர் தலைல 2 கொட்டு கொட்டிரலாம்..!

ரிச்சாசாசாசாசாசாசாசாசாசாசாசாசாசாசா....... அறிமுக சீன்ல அப்படியே பனிக்கட்டியை உருக வைச்சு அதுல சிலை செஞ்ச மாதிரி நிக்குறப்போ எவனுக்கு லவ் பீலிங் வராது.. வரும்.. அதுலேயும் அந்த லூஸூ இன்ஸ்பெக்டருக்கு வரலைன்னா நிச்சயமா அவன் லூஸே இல்லை. ஸோ.. காதல் பத்திக்கும் அந்தக் காட்சிக்கு இடைலேயே பரபர சேஸிங்கையும் வைச்சு ரன்வேல பத்தியிருக்காரு திரைக்கதையை.. வெல்டன்..!

படம் முழுக்க அம்மணி பேசியிருக்குற வசனத்தை ஒரேயொரு ஏ4 பேப்பர்ல எழுதிரலாம்.. மயக்கம் என்னவில் பார்த்த ரிச்சாவுக்கும், இதுக்கும் நிறைய வித்தியாசம். அழகும்கூடவே இருக்கு.. கோபிநாத் இதை மட்டும் கச்சிதமா செஞ்சிருக்காரு..! அப்ப்ப்போ இடுப்பு தெரியற மாதிரியும், முழு முதுகும் தெரியற மாதிரியும் அங்கிட்டும், இங்கிட்டுமா நடக்க வைச்சு.. என்னை மாதிரி யூத்துக்களை..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! வேணாம்.. நம்ம வினவு அண்ணாச்சிக நம்ம தளத்தை உன்னிப்பா வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்குற மாதிரி தெரியுது. எதுக்கு வம்பு..? இத்தோட இந்த மேட்டருக்கு மங்களம் பாடிருவோம்..!

படத்துல வேஸ்ட்டான மேட்டர் மல்லிகா ஷெராவத்தின் குத்துப் பாட்டும், டான்ஸும்தான்.. இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா..? அடப் போங்கப்பா..!  சோனுசூட்டுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவரை கண்டிப்பா பாராட்டணும்.. இப்படியொரு ஹிந்தி மாடுலேஷனையும் கச்சிதமா ஏலே, வாலே, போலேன்னு பேச வைச்சு அதையும் கச்சிதமா செஞ்சிருக்காங்க..! நாசர், ரேவதி ஓகே.. பட் பீல் குட்.. மருத்துவமனையில் நாசரிடம் சிம்பு பேசும் வசனங்களும், அப்பா என்றழைக்கும்போது நாசரின் ஆக்சனும் பெர்பெக்ட்..!

பாடல்களையெல்லாம் மனப்பாடம் செஞ்ச மாதிரி அல்லா யூத்துகளும் பாடிக்கிட்டேயிருக்காங்க. நமக்குத்தான் மண்டைல ஏற மாட்டேங்குது.. இத்தனை வசதி, வாய்ப்புகள் கொடுத்தும், ஹீரோயினை நடக்க விட்டே பாட்டு சீன்களை எடுத்தது ஏன்னுதான் தெரியலை.. அதுலேயும் அந்த பிளைட் பக்கத்துல நின்னு இவங்க கொடுக்குற டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.. அநியாயத்துக்கு வேஸ்ட்டு.. ஒருவேளை டான்ஸ் மாஸ்டரை கூட்டிட்டு போகலியோ..?

விஜயகுமார்ன்னு ஒரு ஆக்டர் ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் என்ட்ரி..  போலீஸ் கான்ஸ்டபிள்களாக தம்பி இராமையா, மயில்சாமி, கோஷ்டியுடன் சந்தானம் எடுத்துவிடும் டயலாக்குகளால்தான் இந்த குருப்பீன் டெர்ரர் கும்மி படம் பார்ப்பவர்களின் கழுத்தை பதம் பார்க்காமல் விடுகிறது..! 

இப்படி அலுங்காமல், குலுங்காமல் சிரிச்சு பேசியே ஒரு சாதாரண இன்ஸ்பெக்டரால் பண முதலைகளையும், அரசியல்வியாதிகளையும் சமாளிக்க முடியுமெனில்.. உஷ்.. அதான் முதல் பாராவிலேயே சொல்லிட்டேன். நோ லாஜிக்.. ஒன்லி எண்ட்டெர்டெயிண்ட்.. எண்ட்டெர்டெயிண்ட் எண்ட்டெர்டெயிண்ட்!

ரொம்ப நாள் கழிச்சு பொட்டி வரலைன்னு கன்னத்துல கை வைச்சு காத்துக்கிட்டிருந்த ரசிகர்களை காசி தியேட்டர்ல பார்க்க வேண்டியதா போச்சு.. முந்தின படங்களுக்குத் தர வேண்டிய பாக்கியை மொதல்ல எடுத்து வை என்ற விநியோகஸ்தர்களின் கடைசி நேர நெருக்கடியினால் குறள் டிவி ஓனரான டி.ஆரே, தனது சொந்தப் பணத்தில் கொடுப்பதுபோல் கொடுத்து, அதையும் இந்தப் படத்துக்கான விநியோகப் பணமாக தானே எடுத்துக் கொண்,டு ஒரு வழியாகப் பஞ்சாயத்து பேசி மதியம் 3 மணிக்குத்தான் முதல் ஷோவே ஓடியிருக்கு..! 

சினிமாவை விமர்சிப்பவர்களை ஒரு நாளைக்கு இந்தக் கடைசி நேர பஞ்சாயத்தில் பார்வையாளர்களாக உட்கார வைக்க வேண்டும். அவர்களுடைய ரியாக்ஷனை தெரிந்து கொள்ள ஆசை..! என்னவோ போங்க..! நேர்மை இரண்டு பக்கமும் இருந்தால் பிரச்சினையில்லை.. ஒரு பக்கம் என்றால் இது போலத்தான் நடக்கும்..!

ஒஸ்தி - சிலருக்கு நாஸ்தி.. பலருக்கும் குஸ்தி..!