Thursday, December 29, 2011

அட்டகத்தி - சென்னையின் புறநகர வாழ்க்கையை மையப்படுத்தி வரும் முதல் படம்!




Attakathi
தமிழ் சினிமாவில் தொன்னூறு சதவீதப் படங்கள் மதுரை அல்லது தூத்துக்குடி பின்னணியில்தான் வருகின்றன. அதை மீறி வரும் படங்களில் வட சென்னை- காசிமேடு - மீனவர் வாழ்க்கை என காட்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் முதல் முறையாக மதுரை, வட சென்னை பின்னணி இல்லாமல், சென்னையின் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்குகளை மையமாக வைத்து ஒரு படம் உருவாகிறது. அந்தப் படத்துக்கு அட்டகத்தி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த புறநகர்ப் பகுதிகளில் வாழ்பவர்கள் பெரும்பாலும் வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து குடியிருப்பவர்கள்தான் என்பதால், கலவையான பேச்சு வழக்கு, தனித்த வாழ்க்கை முறை என இருப்பார்கள்.

இதைத்தான் அட்டகத்தியில் படம்பிடித்துள்ளாராம் இயக்குநர் பா இரஞ்சித். இவர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்தவர். அட்டகத்திதான் இவருக்கு முதல் படம்.

ஒரு அட்டகத்தி தன்னை வெட்டுக்கத்தியாக நினைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோ ரோலுக்கு ஆறு புதுமுகங்களை தேர்வு செய்து, அவர்களில் இறுதியாக தினேஷ் என்பவருக்கு வாய்ப்பு தந்துள்ளனர். புதுமுகம் ஸ்வேதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு தாய்மொழி கன்னடம். ஆனால் தமிழ் சரளமாகத் தெரியும் என்பதால் தேர்வு செய்தார்களாம்.

மானாட மயிலாட ஐஸ்வர்யா முக்கிய வேடத்தில் வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சென்னையின் புறநகர்களான பழந்தண்டலம், பூந்தண்டலம், கொளப்பாக்கம், மணப்பாக்கம், திருநீர்மலை, குன்றத்தூர் என சுற்றிச் சுற்றி படமாக்கியுள்ளார்களாம்.

'துப்பாக்கி'யில் கெட்டப் மாறும் விஜய்!



Vijay
துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.

பொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர் விஜய்.

'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.

இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம். 

மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.

பாங்காக் போகும் விஷால் - த்ரிஷா ஜோடி!

Vishal and Trisha

சமரன் படத்துக்காக பாங்காக் போகின்றனர் நடிகர் விஷாலும் ஹீரோயின் த்ரிஷாவும். 

சிம்புவின் அதிகப்பிரசங்கித்தனத்தால் பெரும் தோல்வியைத் தழுவிய ஒஸ்தி படத்துக்குப் பிறகு பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கும் புதிய படம் சமரன். விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்க, தீராத விளையாட்டுப் பிள்ளை படம் தந்த திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம். பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணிக் கலைஞர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதை இயல்பானது. ஒரு சராசாரி மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள், அதனால் அவன்படும் பாடுகள்தான் இந்தப் படத்தின் திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இதுவரை பார்க்காத புதிய அனுபவத்தை இந்தப் படம் உங்களுக்குத் தரும் என்கிறார் இயக்குநர் திரு. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சாலக்குடியில் 15 நாட்கள் நடந்தது. 

அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ந்தேதி முதல் தாய்லாந்தில் 50 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும் ஐரோப்பாவின் சரித்திர பிரசித்தி இடங்களில் சண்டைக் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

'மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் '3'! - தனுஷ்



Aishwarya and Danush
மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தான் நடிக்கும் முதலும் கடைசியுமான படம் '3' என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

கொலவெறி பாடலுக்குப் பின் படுபாப்புலராகி, பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நடிகர் தனுஷ், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததற்கும், என் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்ததற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இயக்குநர் வேலையை சிலசமயங்களில் வீட்டுக்கும் எடுத்து வருவார். அதனால் நாங்க சண்டை போட்டுக்கொண்டதுண்டு. இது, எல்லா வீட்டிலும் நடக்கிற சண்டைதான்.

ஐஸ்வர்யா தொடர்ந்து இனி படங்கள் இயக்குவார். ஆனால், அவர் இயக்கத்தில் நான் நடித்த முதல் படமும், கடைசி படமும் இதுதான். வெளி கம்பெனிகளுக்கு ஐஸ்வர்யா தொடர்ந்து படங்கள் இயக்குவார்.

இதுவரை பல நடிகைகளுடன் நடித்துவிட்டேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்கள்தான். உடல்வாகைப் பொருத்தவரை ஜெனிலியா எனக்கு பொருத்தமானவர். மற்றபடி, 'கெமிஸ்ட்ரி' என்று சொல்கிறார்களே, அதன்படி நயன்தாரா பொருத்தமானவர்.

எனக்கு கிடைக்கும் பெருமைகள், விருதுகள் போன்றவற்றுக்குக் காரணம், எதையும் எதிர்ப்பார்க்காமல் நான் என் வேலையைச் செய்வதுதான். 

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று சொல்வார்கள். அதன்படி, நான் என் வேலையை செய்கிறேன். எந்த வேலை செய்தாலும் சந்தோஷமாக செய்ய வேண்டும். என் வேலைகளை சந்தோஷமாக செய்கிறேன். கடவுளும், மக்களும் கொடுக்கும் வரவேற்பை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

மருமகன் தனுஷுக்கு மாமனார் ரஜினி சொன்ன அட்வைஸ்!!



Rajinikanth and Danush
சுற்றி குடிசைகளாக இருக்கும்போது நாமும் குடிசைதான் கட்டணும் என்று தனக்கு சூப்பர் ஸ்டாரும் தனது மாமனாருமான ரஜினிகாந்த் கூறியதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

இந்தியா முழுக்க பிரபலமான முகமாகிவிட்டார் தனுஷ். அவரது இந்த பாப்புலாரிட்டியால் வெந்து வெதும்பிப் போயுள்ளனர் போட்டி நடிகர்கள். கொலவெறிக்குப் போட்டியாக ஒருபாட்டை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு என்னென்னமோ காமெடி செய்து வருகிறார்கள்.

ஆனால், 'கூல்' தனுஷுக்கோ கேட்காமலே தேடி வருகிறது கவுரவங்கள். ஜப்பான் பிரதமருக்கு தான் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் தனுஷையும் சேர்த்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். 

இதுகுறித்து தனுஷ் கூறுகையில், 'கொலவெறி பாடலுக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. படத்துக்கு தகுந்த பாடலாக இருக்கும் என்றும், மக்களுக்கு திருப்தி தரும் பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். இந்த அளவுக்கு பிரபலமானதற்கு கடவுளின் கருணையும், மக்கள் கொடுத்த வரவேற்பும்தான் காரணம்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

'உங்கள் மாமனார் (ரஜினிகாந்த்) சமீபத்தில் உங்களுக்கு சொன்ன அறிவுரை என்ன?' என்று அவரிடம் கேட்டதற்கு, "சமீபத்தில் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொல்லவில்லை. என் கல்யாணம் நடந்த சமயத்தில் சொல்லியிருக்கிறார். 'சுற்றி குடிசைகள் இருக்கும்போது, நாமும் குடிசைதான் கட்டணும்'' என்றார். அதற்கு அப்புறம் அவர் எனக்கு எந்த அறிவுரையும் சொன்னதில்லை" என்று பதிலளித்துள்ளார் தனுஷ்.

உங்கள் மாமனாரும் நீங்களும் சேர்ந்து நடிக்கும் காலம் வருமா? என்ற கேள்விக்கு, "அதை சார் (ரஜினிகாந்த்)தான் சொல்லணும். இதை நான் மருமகனாக சொல்லவில்லை. அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில், நானும் ஒருவன். அவரை பிரமிப்பாக பார்க்கிற கூட்டத்தில், நானும் ஒருவனாக சொல்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.

Tuesday, December 27, 2011

மன்மோகன் சிங்குக்கும் பிடித்த 'கொலவெறி'... தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து!



Manmohan Singh and Danush
ஊரே திட்டித் தீர்க்கிற அளவுக்கு விமர்சனங்களை கிளப்பியுள்ள தனுஷின் கொலவெறி பாட்டு, அவரை பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு 'உயர்த்தியுள்ளது'. 

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '3' படத்தில் 'ஒய் திஸ் கொலைவெறி டி..' என்ற தமிங்கிலீஷ் பாட்டை எழுதிப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடல் ஏக பிரபலம் ஆகிவிட்டது. யு ட்யூபின் கோல்ட் விருது இந்தப் பாடலுக்கு தரப்பட்டது. டைம் இதழில் தனுஷின் பெயர் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பாடலாசிரியர்கள், இசை விமர்சகர்கள் கடுமையாக இந்தப் பாட்டை விமர்சித்து வருகின்றனர். 'நேரடியான தமிழ்க் கொலை' இது என அவர்கள் சாடியுள்ளனர். ஏற்கெனவே தமிழ் சினிமா பாடல்களில் தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்துவிட்ட நிலையில், தனுஷின் இந்த 'தமிழ்க் கொலை' புதிய ட்ரெண்டை சினிமாவில் உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளும் 'நிதானத்தில்' தனுஷ் இல்லை. டெல்லி, மும்பை, ஹைதராபாத் என நகரம் நகரமாக மதுவிருந்துகளில் இந்தப் பாட்டை சக நடிகைகளுடன் பாடி ஆடி வருகிறார். 

இந்த நிலையில், தனுஷை தன்னோடு விருந்துண்ண அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை (டிசம்பர் 28) விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுஷுக்கு பிரதமர் அலவலகதத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. 

ஏற்கெனவே கொலவெறி ஹிட்டால் மிதப்பிலிருந்த தனுஷ், இந்த புதிய கவுரவத்தால் தலைகால் புரியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார். அர்த்தமில்லாத தனது பாட்டுக்கு புதுப்புது அர்த்தங்களைக் கற்பித்துக் கூறி வருகிறார்.

அவர் கூறுகையில், "கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் மிகுந்த அர்த்தம் உள்ளது. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவரையும் டச் பண்ணிவிட்டன. இந்த வரிகளில் உள்ள நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துக்கள் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்து விட்டன. அதுதான் எனக்கு இத்தனை பெரிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது," என்றார்.

Monday, December 26, 2011

முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜுடன் கை கோர்க்கிறார் இயக்குநர் செல்வராகவன்



Harris Jeyaraj And Selvaragavan
பிவிபி சினிமாஸ் தயாரிக்க, செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்கிறார்.

பழைய பாப்புலர் மெட்டுக்களை புதிதாக பாலீஷ் போட்டு, அது பழைய மெட்டு என்றே தெரியாத அளவுக்கு தருவதில் கில்லாடி ஹாரிஸ் ஜெயராஜ். உதாரணம், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு...

ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இவரது இசைக்கு வரவேற்பு இருப்பதாக நம்புவதால், அவர் காட்டில் நல்ல மழை!

செல்வராகவன் படங்களுக்கு ஆரம்பத்தில் இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜிவி பிரகாஷ் குமாருடன் இணைந்தார் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார்.

இப்போது இரண்டாம் உலகம் படத்தை உருவாக்கி வருகிறார் செல்வா. ஆர்யா - அனுஷ்கா நடிக்கும் இந்தப் படத்தை, ராஜபாட்டை தயாரித்த பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை செல்வராகவனே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஹாரிஸுடன் இணைவது உண்மைதான். நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து தெருக்களில் வசிப்பவர்கள். சிறு வயதிலிருந்தே நானும் ஹாரிஸும் நண்பர்கள். அப்போது நான் முரட்டுப் பையன். ஹாரிஸ் அமைதியாக இருப்பார். இப்போது இருவரும் இணைந்து படம் பண்ணுகிறோம். இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்," என்றார்.

மலையாள இயக்குநரின் பாலிவுட் படத்தில் மீண்டும் விக்ரம்!



Vikram
ராவண் படத்துக்குப் பிறகு மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் நடிகர் விக்ரம்.

இந்தப் படத்தை மலையாள இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்குகிறார்.

விக்ரம் முதல் முதலாக நடித்த இந்திப் படம் ராவண். மணிரத்னம் இயக்கி படுதோல்வியைச் சந்தித்த படம் இது. ஆனாலும் படத்தில் ஹீரோ அபிஷேக் பச்சனை விட, ராவணாக நடித்த விக்ரமுக்கு ஏக பாராட்டுகள் குவிந்தன.

இப்போது மீண்டும் ஒரு இந்திப் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்தப் படத்துக்கு 'டேவிட்' என பெயர் வைத்துள்ளனர்.

மணிரத்னத்தின் உதவியாளராக இருந்த பிஜாய் நம்பியார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து விக்ரம் கூறுகையில், "பிஜாய் இயக்கும் இந்திப் படத்தில் நடிப்பது உண்மைதான். 2012-ல் ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ராவண் படம் பண்ண போதே, பிஜாயுடன் எனக்கு நெருங்கிய பழக்கம்," என்றார்.

இந்தியில் வெளியான சைத்தான் என்ற படத்தை ஏற்கெனவே இயக்கியவர் இந்த பிஜாய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 25, 2011

மம்முட்டி மகன் கல்யாணம்- தமிழ்த் திரையுலகினர், அரசியல்வாதிகள் வாழ்த்து



மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழ்த் திரையுலகினர், அரசியல்வாதிகள் பெருமளவில் திரண்டு சென்று வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

மம்முட்டிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு கல்யாணம் ஆகி விட்டது. மகன் துல்கார் சல்மானுக்கும், சென்னையைச் சேர்ந்த அமல்சுபையாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இதற்காக சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மம்முட்டி திருமண அழைப்பிதழைக் கொடுத்தார்.

துல்காரின் திரு்மணம் நேற்று சென்னை அடையாரில் நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பதட்டம் நிலவி வருவதால் திருமணம் நடந்த இடத்திற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

திருமண விழாவில் தமிழ்த் திரையுலகினர் பெருமளவில் திரண்டு சென்று வாழ்த்து தெரிவித்தனர். பிரபு, ராதிகா உள்ளிட்டோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர். அதேபோல தமிழக அரசியல்வாதிகள் பலரும் கூட வந்திருந்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கொச்சியில் வைத்துள்ளார் மம்முட்டி. அதில் மலையாளத் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர்.

ரஜினியோடு நடிச்சா நல்லாருக்கும் - 'ஃபீல்' பண்ணும் அசின்



Rajini and Asin
'ரஜினியுடன் நடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் அதை படத்தின் இயக்குநர் -தயாரிப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார் நடிகை அசின்.

மூன்று படங்களை முடித்துள்ள அசினுக்கு இப்போது இந்தியில் பெரிதாக வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் மீண்டும் தமிழில் பிஸியாக வாய்ப்பை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.

கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாகிவிட்டால், இந்தியா முழுக்க பிரபலமான நடிகையாகிவிடலாம் என்பது அவர் எண்ணம்.

ஏற்கெனவே இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டு, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மலையாள நடிகைகளுக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. 

இப்போது மீண்டும் அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது. அதை ஆமோதிக்கும் வகையில், கோச்சடையானில் நடிக்க நான் மிக ஆவலாக இருக்கிறேன். ரஜினியுடன் நடித்தால் நன்றாக இருக்கும். நான் ரெடி. இயக்குநரும் தயாரிப்பாளரும்தான் இனி அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

'காட்டிக் கொடுத்த' கருணா கோஷ்டியின் புத்தாண்டு விழாவில் சங்கீதா, ஜீவா, கிரிஷ்!



Jeeva-Sangeetha

'காட்டிக் கொடுத்த' கருணா கோஷ்டியின் புத்தாண்டு விழாவில் சங்கீதா, ஜீவா, கிரிஷ்!

ஈழப் போரில் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அரசியல் ஆதாயம் பெற்றவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணா கோஷ்டி நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா, நடிகர் ஜீவா, பாடகர் கிரிஷ் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒரிரு தினங்களில்அந்நாட்டுக்கு புறப்பட தயாராகி வந்தனர். இந்த நிலையில் அந்த புத்தாண்டு விழாவில் மூவரும் கலந்து கொள்வதற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


காரணம், இந்த விழாவை நடத்துவது, ஈழப் போரில் தமிழ்ப் போராளிகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்து கருணாவும் அவர் கோஷ்டியினரும் என்பதுதான். 


இதுகுறித்து இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த வருடம் விடுதலைப் புலிகளுக்கு துரோகம் செய்து விட்டு ராஜபக்சேவுடன் கைகோர்த்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் புத்தாண்டும் புதுவாழ்வும் என்ற தலைப்பில் நியூசிலாந்தில் புத்தாண்ட விழாவை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்கள்.

கருணா கோஷ்டியினர் நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அந்த நாட்டில் போஸ்டர்கள் ஒட்டி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மூவரும் அந்த விழாவுக்கு செல்லக்கூடாது.

இலங்கையில் தமிழர்களின் இன அழிப்புக்கு கருணா முக்கிய காரணமாக இருக்கிறார். அவரை உலக தமிழர்கள் மன்னிக்கவே மாட்டார்கள். கருணா கோஷ்டியினர் நடத்தும் புத்தாண்டு விழாவுக்கு சென்றால் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்," என்று குறிப்பிட்டுள்ளது.


மேலும், ஈழத் தமிழர் அமைப்புகள் பலவும் இந்த விழாவில் தமிழ் நடிகர் நடிகைகள் பங்கேற்பதை கடுமையாக கண்டித்துள்ளன.


கனடா, ஸ்விஸ், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளும் இந்த மூன்று நடிகர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்-ஏ.ஆர்.ரஹ்மான்



AR Rahman
தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த, தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டேம் 999 படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

ரஹ்மானின் இந்த வேண்டுதல், முல்லைப் பெரியாறு அணைக்காக போராடி வரும் அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்துள்ளது. ஒரு தமிழராக இருந்து கொண்டு ரஹ்மான் இப்படிச் சொல்லலாமா என்று அனைவரும் குமுறுகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச அளவில் பிரச்சினையாக்க மலையாளத்தைச் சேர்ந்த சோஹன் ராய் என்பவர், வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகளின் நிதியுதவி மற்றும் கேரள அரசின் முழு ஆதரவுடன் உருவாக்கிய படம்தான் இந்த டேம் 999. ஹாலிவுட் தயாரிப்பாக இதை உருவாக்கி சர்வதேச அளவில் வெளியிட்டு தமிழகத்திற்கு சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படுத்தவே இந்த விஷமப் படத்தை எடுத்தார் ராய். அந்த விஷமத்தின் காரணமாகத்தான், முல்லைப் பெரியாறு அணையின் 999 ஆண்டு குத்தகையைக் குறிப்பிடும் வகையில், டேம் 999 என்று தனது படத்துக்குப் பெயரும் வைத்தார்.

ஆனால் இது முல்லைப் பெரியாறு அணை கதை இல்லை என்று ஊர் ஊராகப் போய் விளக்கிய அவர் கூடவே, முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறார். இந்தப் படத்தில் ஒரு அணை உடைந்து பல லட்சம் பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல கிராபிக்ஸ் காட்டியிருக்கிறார்கள். இது மக்கள் மனதில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துவது போல உள்ளதால், தமிழக அரசும் இப்படத்தை தடை செய்து விட்டது.

இந்தப் படத்தின் இரு பாடல்கள் தற்போது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். அதில் அப்பாடல்கள் வெற்றி பெறத்தான் ரஹ்மான் வாழத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், ஆஸ்கர் விருதுக்கான படங்களின் போட்டியில் டேம் 999 திரைப்படமும், அதன் பாடல்களும் சேர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடல்களில் ஏதாவது ஒன்றாவது ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் ரஹ்மான்.

தமிழகத்தில் பெரும் புயலையும், சர்ச்சையையும் கிளப்பிய இப்படத்துக்கு ஆதரவாக இசைப் புயல் கருத்து தெரிவித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாமே...!

எந்திரன் படத்தை மறந்து விட்டு நண்பன் படம் பார்க்க வாருங்கள்-ஷங்கர் அழைப்பு



Vijay and Ileana
எந்திரன் படத்தை மறந்து விடுங்கள். அது போல நண்பன் இருக்காது. எந்திரனை மறந்து விட்டு நண்பன் படத்தைப் பார்க்க வாருங்கள் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

கோவையில் நண்பன் படத்தின் பாடல் வெளியீடு நடந்தது. ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.

திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார்.

நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.

சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.

சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள் என்றார் ஷங்கர்.

நண்பன் படத்தில் விஜய் நாயகனாக நடிக்க அவருடன் ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Saturday, December 24, 2011

விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? - நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!



Rajapattai Movie
குறிப்பிட்ட ரசிகர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி ரசிக்கப்படும் நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கஷ்டப்பட்டு நல்ல நடிகர் என்ற இமேஜையும், தேசிய விருதையும் பெற்ற அவரது படங்களை ரசிகர்கள் ஓரளவுக்கு எதிர்ப்பார்க்கவே செய்கிறார்கள்.

தெய்வத் திருமகள் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் காப்பியாக இருந்தாலும், விக்ரம் நடிப்புக்காக அந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு அதிரடியாக ஒரு படம் தருவதாகக் கூறி ராஜபாட்டையை வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

குறிப்பாக திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த சுசீந்திரன், தேசிய விருது பெற்ற விக்ரம் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால், தூள், சாமி ரேஞ்சுக்கு ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, ஜேகே ரித்தீஷ் படம் அளவுக்குக் கூட இல்லையே என்ற விமர்சனம் ராஜபாட்டை மீது விழுந்துவிட்டது (இந்தப் படத்தில் லத்தீஸ்வரன் என்று ஒரு ஹீரோவை வேறு விக்ரம் விமர்சனம் பண்ணுகிறார். அது ஜேகே ரித்தீஷா, லத்திகா ஹீரோ பவர் ஸ்டாரா என்ற காமெடி விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது!)

இந்த நிலையில், ராஜபாட்டைக்காக நிருபர்களைச் சந்தித்தார் நடிகர் விக்ரம். இன்று ரெஸிடென்ஸி டவரில் நடந்த இந்த சந்திப்பின்போது, நிருபர்கள் நேரடியாகவே விக்ரமிடம் இந்தப் படம் குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சுசீந்திரன் - விக்ரம் என்றதும், பெரும் எதிர்ப்பார்ப்பு உருவானது. அதைப் பொய்யாக்கிவிட்டதே இந்தப் படம். ஏன் இப்படியொரு படம் தந்தீர்கள் விக்ரம்? என்று கேள்வி எழுப்ப, சற்று சுதாரித்து பதில் தந்தார் விக்ரம்.

தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு ஜாலியா, அதிரடியா, கலர்புல்லா ஒரு படம் தரணும் என்று விரும்பித்தான் இந்தப் படம் செய்தோம். இந்தக் கதை எனக்கு மிகவும பிடித்துப் போனதால் ஒப்புக் கொண்டோம். ஒரே மாதிரி சீரியஸ் படம் கொடுத்தா ரசிகர்களுக்கு அலுத்துப் போகும் என்பதால் எடுத்த முடிவு அது. நீங்கள் தியேட்டரில் ரசிகர்களோடு படம் பாருங்கள் (நேற்று நிருபர்களுடன் படம் பார்த்தார் விக்ரம்!!). ரசிகர்கள் எந்த அளவுக்கு இந்தப் படத்தை ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வீர்கள். நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது," என்றார்!

சரி... படத்தில் வரும் நில அபகரிப்பு அக்கா கேரக்டர் நிஜத்தில் யாருங்க?

ரஜினிக்குப் பின் அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!




Ajith
ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத்.

இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார் (இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்!)

அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன!

ராஜபாட்டை- சினிமா விமர்சனம்







ஒரு படம் வெற்றியடைந்தவுடன் அடுத்தப் படத்தின் வெற்றி தானாகவே வரும் என்று நினைப்பதுதான் பல இயக்குநர்களின் எண்ணம். சுசீந்திரனும் அதில் விதிவிலக்கல்ல..! வெண்ணிலா கபடிக் குழுவினால் அவருக்கு வாழ்க்கை கிடைத்தது. நான் மகான் அல்ல படத்தினால் ஹீரோவுடனும் ஜெயிப்பார் என்று நிரூபணமானது. அழகர்சாமியின் குதிரையில் இலக்கியமும் படைப்பார் என்றானது.. ஆனால் இந்த ராஜபாட்டையில் முழுவதுமாக சறுக்கி விழுந்திருக்கிறார்..! பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றமே கிடைத்திருக்கிறது..!

அனல் முருகன் என்ற பெயரில் சினிமாவில் வில்லன் நடிகராகப் பெயரெடுக்க நினைத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதா நடிகர் விக்ரம்..! தனது மனைவியின் பெயரில் அமைந்திருக்கும் அனாதை ஆசிரம இடத்தை எம்.எல்.ஏ. சீட்டுக்காக கேட்கும் மகனிடமிருந்து தப்பி வந்து விக்ரமிடம் அடைக்கலமாகிறார் கே.விஸ்வநாத். அந்த அனாதை ஆசிரம இடத்தை வளைக்க நினைத்து ஏமாற்றமாகிறார் அக்கா என்னும் அரசியல் வித்தகி ரங்கநாயகி.. மகனைத் தூண்டிவிட்டு தேடச் சொல்கிறார். அவரது அடியாட்களும் தேடுகிறார்கள். விஸ்வநாத் கிடைத்தாரா..? விக்ரம் விட்டாரா? என்பதுதான் மிச்ச சொச்சக் கதை..!

கதை என்னவோ தற்போதைய தமிழகத்தின் ஹாட் ஸ்டோரிதான் என்றாலும், திரைக்கதை அரதப் பழசு. 1985-1990-களில் வெளி வந்த மசாலா படங்களின் டைப்பில் திரைக்கதையை எழுதியிருக்கிறார் சுசீந்திரன். இதையெல்லாம் செய்துவிட்டு திரைக்கதை-இயக்கம் என்று தைரியமாக தன் பெயரையும் போட்டிருக்கிறார்.. ஆச்சரியமான தைரியம்தான்..!

அடுத்தடுத்து காட்சிகள் எப்படி வரும்..? என்னவாக வரும்..? வசனங்கள் என்ன..? ஹீரோ என்ன செய்வார் என்பதை முன்பேயே ஊகித்துவிடுவதால் படத்தில் மூழ்கி முத்தெடுக்க முடியவில்லை. போதாக்குறைக்கு எந்தவித்த்திலும் சேர்க்க முடியாத வெள்ளரி பிஞ்சாக ஹீரோயின்.. கோவில் இல்லை அட்லீஸ்ட் இவருக்காக போஸ்டர்கூட அடிக்க முடியாத அளவுக்கு ஒரு அழகு ஹீரோயின்..  புகைப்படங்களில் மட்டுமே அழகாக இருக்கிறார். படத்தில் செகண்ட் ஹீரோயின் லெவலில் இருக்கிறார். ஒளிப்பதிவாளருடன் ஏதாவது சண்டையோ..! இவருக்கு அப்படியே நேரெதிர், அக்காவாக நடித்திருக்கும் அரசியல் வில்லி.  குளோஸப் காட்சிகளில் குஷ்பூ போலவே இருக்கிறார்..! பேசாமல் கதையை மாற்றி ஹீரோயினுக்கு அம்மாவாகவாவது வைத்திருந்தால் ரசித்திருக்கலாமோ..?

விஸ்வநாத், விக்ரமுக்கு காதலிக்க அட்வைஸ் கொடுக்கும் காட்சிகளும், ஹீரோயினை லின்க் செய்துவிடும் காட்சிகளும் ரொம்பவே ஓவர் என்றாலும், அந்தக் காட்சிகளில் விஸ்வநாத் இல்லாமல் வேறு நபர்களை வைத்திருந்தால் கண்டிப்பாக அனைவரும் ரசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மனதில் இருக்கும் மரியாதையை கட் செய்து காக்காய்க்கு போட முடியலை..! டூ மச்சாகவே இருந்தாலும் கொஞ்சம் ரசித்தேன்..!

மகனாக அவினாஷ்..! அப்பாவிடம் கெஞ்சப் போகிறேன் என்று சொல்லிவிட்டு நொடியில் முகத்தை மாற்றிப் பேசும் அந்த ஒரு நடிப்பு அவரது இத்தனை வருட நாடக வாழ்க்கையை பளிச்சென்று சொல்லிக் காட்டியது..! 

தெலுங்கின் மெகா வில்லனான பிரதீப் இதில் வாப்பா என்ற பெயரில் வில்லனாக உருமாறியிருக்கிறார். கதைக்கு வில்லன் தேவைதான் என்றாலும், இப்போதைய காலக்கட்டத்தில் இப்படியொரு கேரக்டர் ஸ்கெட்ச் தேவையா..? வாப்பாவின் தோழர்கள் அனைவரும் அரிவாளோடு ஓடி வந்து முருகனுடன் சண்டையிடுவதை நினைத்துப் பார்த்தால் நிஜத்தில் பகீரென்கிறது..! இதுவரையில எந்தவொரு சினிமாவிலும் இப்படி பகிரங்கமாக முருகனையும், வாப்பாவையும் மோதவிட்டதில்லை என்று நினைக்கிறேன்..! 

தசாவதாரம் படத்தின் மீது அனைத்து அரிதார நடிகர்களுக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்யும். அதற்காக அது போன்றே அத்தனை வேடங்களையும் ஒரே படத்தில், ஒரே காட்சியில் இப்படித்தானா வைத்து ஆற்றிக் கொள்ள வேண்டும்..!? விக்ரமின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது..! 

சினிமா ஸ்டண்ட் நடிகர்கள் என்றால் அவரது நண்பர்கள் அனைவரும் வாட்டசாட்டமாக ரவுடிகளை போலவே இருப்பார்கள்.. கதைக்குப் பொருத்தமானதாக இருக்கும். திரைக்கதையில் பல்வேறு போலிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் சுசீந்திரன். பிரதீப்பை சிபிஐ, லோக்கல் போலீஸ் என்று ஆள் மாறாட்டம் செய்து விசாரிக்கும் உத்தி, முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும், விக்ரமின் பலவேஷ மேக்கப் காட்சிகள்தான் கொஞ்சம் காமெடியாகிவிட்டது..! இதனைச் செய்யாமலேயே இருந்திருக்கலாம்..!

அவனவன் வட்டிக்கு கடன் வாங்கி, அந்தக் கடன் வட்டியையே கட்ட முடியாமல், திரும்பவும் வட்டிக்கு கடன் வாங்கி.. ஒரேயொரு கையெழுத்தில் 50 வருட சம்பாத்தியத்தையே இழந்து கோடம்பாக்கத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், லட்சங்களில் செலவு செய்து வெளிநாட்டில் போய் ஷூட் செய்திருக்கும் ரீமாசென், ஷ்ரேயா, விக்ரமின் பாடல் காட்சியை இப்படியா எண்ட் டைட்டிலில் வைத்து கொடுமைப்படுத்துவது..? பாவம் தயாரிப்பாளர்.. என்றைக்காவது ஒரு நாள் இதனை நினைத்து தலையணையில் முகம் புதைத்து அழுகத்தான் போகிறார்..!

இடையிடையே நகைச்சுவை என்ற பெயரில் விஸ்வநாத்தும், தம்பி ராமையாவும், எதிரணியில் இருக்கும் 2 மொன்னை ரவுடிகளும் ரவுசு கட்டுகிறார்கள்..! இதுவே போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார்..! 

இசை யுவன்ஷங்கர்ராஜாவாம்.. அனைத்துப் பாடல்களும் யுகபாரதியாம்.. இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வார்த்தைகளுக்கு மெட்டமைத்திருக்கிறார். ஆனாலும் மனதில் நிற்கவில்லை..! ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடும் அழகியைவிடவும் அதன் பாடல் வரிகள் நில்லாததுதான் கொடுமை..! 

கமர்ஷியல் படங்கள் எடுக்கலாம்தான்.. ஆனாலும் விக்ரம் போன்ற மாஸ் ஹீரோக்களை கையில் வைத்துக் கொண்டு அவர் ஏற்கெனவே நடித்த தில், தூள் வகையறாவிலேயே தோசை சுட்டால் எப்படி..? விக்ரமாவது கொஞ்சம் சுதாரித்திருக்க வேண்டாமா..? தெய்வத்திருமகளில் கிடைத்த பாராட்டுக்களில் கால்வாசிகூட இந்தப் படத்திற்காக அவருக்குக் கிடைக்கப் போவதில்லை..!

ஸாரி.. தலைவலி வரவில்லைதான்.. அதே சமயம் வீணாகிவிட்டதே என்கிற கோபமும் வருகிறது..!


Thursday, December 22, 2011

கமல் படத்தில் ஷங்கர் - லிங்குசாமி?



Shankar, Kamal and Lingusamy
கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளைக் கேட்டு வருகிறாராம்.

கமலிடம் இப்போது இரு இயக்குநர்களின் ஸ்கிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முதலில் அவர் ஓகே செய்வார் இரு இயக்குநர்களும் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அந்த இருவர் இயக்குநர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி. லிங்குசாமியின் ஸ்கிப்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல் கூறியுள்ளாராம்.

எனவே லிங்குசாமி இப்போது வேட்டை முடிந்ததும், விஷாலை வைத்து படம் பண்ணப் போகிறாராம். அதே நேரம் கமல் படத்திலும் அவர் இருப்பாராம். எப்படி? ஒரு தயாரிப்பாளாராக.

ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கக் கூடும் என்கிறார்கள், வேட்டை இசை விழாவுக்கு ஷங்கர் வந்ததை வைத்து.

தமிழ் சினிமாவில் எந்தக் கணிப்பும் மாறலாம்... அதுவும் கமல் விஷயத்தில் பல கணிப்புகள் பொய்யாய் போயிருக்கின்றன. தனக்கு சரி எனப் படும் வரை எதற்காகவும் சமரசமாகாத கலைஞர் அவர். எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்!

தமன்னா பிறந்த நாள் பார்ட்டி... சரக்கடித்துவிட்டு பூனம் பாஜ்வாவுடன் 'கொலவெறி' பாடிய தனுஷ்!



Tamanna and Poonam Bajwa
தமன்னா பிறந்த நாள் விழாவில் நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற தனு், குடித்துவிட்டு பூனம் பாஜ்வாவுடன் ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

தனுஷ் எழுதிப் பாடி பெரிய ஹிட்டாகியுள்ள பாட்டு ஒய் திஸ் கொல வெறிடி. இந்தப் பாடல் ஹிட்டான அளவுக்கு, இசை ரசிகர்களிடம் திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், பார்ட்டிகளில் இந்தப் பாட்டுக்கு ஏக மவுசு. 

சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் விழா பார்ட்டி நட்சத்திர ஓட்டலில் உள்ள பாரில் நடந்துள்ளது. இந்த விழாவில் மதுவருந்திக் கொண்டு, கொலவெறி பாட்டைப் பாடுகிறார் தனுஷ். 

அவருடன் அந்தப் பாட்டுக்கு, ஒரு பக்கம் முகம் முழுக்க கேக் க்ரீம் பூசிக் கொண்டு மதுக்கிண்ணத்தை ஏந்திபடி தமன்னாவும், இன்னொரு பக்கம் நடிகை பூனம் பாஜ்வாவும் ஆட்டம் போடுகிறார்கள்.

யுட்யூபிலும், பேஸ்புக்கிலும் இப்போது ஹாட்டான டாபிக் இந்த வீடியோதான்!

Wednesday, December 21, 2011

தொடங்கியது கோச்சடையான்... ஹீரோயின் அனுஷ்கா இல்லை!



ரஜினியின் 3 டி அனிமேஷன் படத்தின் வேலைகள் முழுவீச்சில் தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக, கடந்த இரு தினங்களாக சில காட்சிகளை ஸ்டுடியோவில் வைத்து எடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

ரஜினியின் உடல் அசைவுகள், ஸ்டைல்களை இதில் படமாக்கி வருகின்றனர். இந்தக் காட்சிகள் பின்னர் மோஷன் கேப்சரிங் மூலம் அனிமேஷன் ரஜினிக்கு மாற்றப்படும்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்பட்டது. அவரும் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இடையில் அசின் பெயரெல்லாம் கூட அடிபட்டது. ஆனால் இப்போது அனுஷ்காவும் இல்லை, அசினும் இல்லை. கத்ரீனா அல்லது தீபிகா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

இந்த வாரம் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை அறிவிப்பதாக சௌந்தர்யா கூறியிருந்தார். இன்று அல்லது நாளை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.

இதற்கிடையே, ரஜினிக்கு ஷங்கர் சொன்ன கதை குறித்த விவாதம் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

தமிழில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி... பிரபல டிவியில் நடத்துகிறார் சூர்யா!



Surya
இந்தியில் பிரபலமான கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தமிழில் பிரபல சேனலில் நடத்துகிறார் நடிகர் சூர்யா. இதன் மூலம் அவர் சின்னத் திரையிலும் கால் பதிக்கிறார். 

உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘கோன் பனேகா குரோர்பதி’. 

தமிழில் இந்த நிகழ்ச்சி கோடீஸ்வரன் என்ற பெயரில் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரான சூர்யா தொகுத்து வழங்க இருக்கிறார். 

இந்த நிகழ்ச்சியை சில ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஹிந்தி தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார். அதேபோல் தமிழிலும் ‘கோடீஸ்வரன்’ என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்தார்கள். இதனை சன்டிவி நடத்த, சரத்குமார் தொகுத்து வழங்கினார். சூப்பர் ஹிட்டானது நிகழ்ச்சி.

இதைத் தொடர்ந்து இபபோது கோன் பனேகா குரோர்பதி போன்றே, ‘கோடீஸ்வரன்’ என்ற பெயரில் வேறு தொலைக்காட்டியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை தேர்வு செய்துள்ளனர்.

இன்றைய தினசரிகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களும் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியானது. பேரம் படியாததால், சூர்யாவுக்குப் போய்விட்டது என்கிறார்கள்!

Tuesday, December 20, 2011

தமிழக தியேட்டர்களில் இனி இரவு காட்சி ரத்து!




Theater

சென்னை: பெண்களின் பாதுகாப்பு, கூட்டமில்லாத நிலை காரணமாக தமிழக திரையரங்குகளில் இனி இரவு காட்சியை ரத்து செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், தினமும் 4 காட்சிகள் நடத்தப்படுகின்றன. காலை காட்சி 12 மணிக்கும், பகல் காட்சி 3 மணிக்கும், மாலை காட்சி 6-30 அல்லது 7 மணிக்கும், இரவு காட்சி 10 அல்லது 10-30 மணிக்கும் நடத்தப்படுகின்றன.

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பிற்பகல் 2-30, மாலை 6-30, இரவு 10-30 என தினமும் 3 காட்சிகள் நடத்தப்படுகின்றன.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை நகரங்களில் மட்டும் இரவுக்காட்சி கிடையாது.

காலியான அரங்குகள்

மேலும் இரவு 10-30 மணி காட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இரவு காட்சி முடியும்போது நள்ளிரவு ஆகிவிடுவதால், அந்த காட்சிக்கு வருவதை பெரும்பாலானவர்கள் தவிர்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை கருதி, இரவுக் காட்சிக்கு வருவதில்லை.

இதனால், தியேட்டர்களில் இரவு காட்சிக்கு கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நிறைய தியேட்டர்களில் இரவு காட்சிக்கு நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே வருகிறார்கள்.

இப்போது பனிக்காலமாக இருப்பதால், இரவில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்கிறார்கள். தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. சென்னையில் மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் மட்டும் இரவுக் காட்சிக்கு ஓரளவு கூட்டம் வருகிறது.

இரவு காட்சி ரத்து

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தியேட்டர்களில், இரவு காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. நிரந்தரமாக அந்த காட்சியை ரத்து செய்வது பற்றியும், பெங்களூரைப்போல் காட்சி நேரத்தை மாற்றி அமைப்பது பற்றியும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரில் காலை காட்சி 11 மணிக்கும், பகல் காட்சி 2 மணிக்கும், மாலை காட்சி 4 மணிக்கும், இரவு காட்சி 7 மணிக்கும் நடத்தப்படுகின்றன.

இதேபோல காட்சி நேரத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக பல்வேறு திரையரங்க சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மல்லிகா ஷெராவத்தின் புத்தாண்டு நடனத்திற்கு நிமிடத்திற்கு 4 லட்சம் பீஸ்!




Mallika Sherawat
மும்பை: இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் புத்தாண்டு பார்ட்டியில் பங்கேற்க நிமிடத்திற்கு 4 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்து அதற்கேற்ப புக் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய நடன நிகழ்ச்சிகள் களை கட்டும். நடிகைகள் காட்டில் பண மழை கொட்டும். நள்ளிரவு பார்ட்டிக்காக கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள் நட்சத்திர ஓட்டல்காரர்கள்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தின் நடனத்திற்காக நிமிடத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்து புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2011 டிசம்பர் 31 ம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கும் மல்லிகா ஷெராவத்தின் நடன நிகழ்ச்சி அரைமணி நேரம் மட்டுமே. இந்த முப்பது நிமிட நடனத்திற்காக 12 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்துள்ளது அந்த தனியார் ஓட்டல் நிர்வாகம். இதுதான் மும்பையில் இப்போது லேட்டஸ்ட் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

புத்தாண்டு பார்ட்டிகள் என்றாலே நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து அழைத்து வந்து அவர்களை நடனமாட விடுவது இப்போது பேஷனாகிவிட்டது என்பதால் கவர்ச்சி நடிகைகளுக்கு அதுவும் மல்லிகா போன்ற நடிகைகளுக்கு எப்போதுமே கிராக்கிதான்.

நடிகர் நந்தா தயாரிக்கும் 'திலீபன்': புலிகள் தலைவர் பிரபாகரன் கதையா?




Nanda and Prabhakaran
விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் கதையை திலீபன் என்ற பெயரில் படமாக்குவதாக வந்த செய்தியை மறுத்துள்ளார் நடிகர் நந்தா.

விடுதலைப் புலிகளின் போராட்டக் களத்தை பின்னணியாகக் கொண்டு வெளியான ஆணிவேர் படத்தில் நடித்ததன் மூலம் உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களின் அபிமானத்தைப் பெற்றவர் நடிகர் நந்தா.

பல படங்களில் நடித்துவிட்ட நந்தா, இப்போது தயாரிப்பாளராகியுள்ளார். அடுத்து 'திலீபன்' என்ற பெயரில் புதுப்படம் தயாரிக்கிறார். இதில் பிரபாகரன் கதையை படமாக்குவதாக செய்தி பரவியது. பிரபாகரன் வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினைகள் பிரபாகரன், திலீபன் போராட்டங்கள் இதில் காட்சிப்படுத்தப்படுவதாக கூறினர். இதனால் உலகத் தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

ஆனால், 'திலீபன்' படம் பிரபாகரன் கதையல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார் நந்தா. அவர் கூறுகையில், "திலீபன் படத்தை நான் தயாரிப்பது உண்மைதான். ஆனால் படத்தில் எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கேரக்டரை நான் காண்பிக்கவில்லை. ஆனால் தமிழருக்கான படம் இது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஏற்கனவே 'ஆணிவேர்' படத்தில் நான் நடித்துள்ளேன். அப்படம் உலகம் முழுவதும் உள்ள தமிழர் நெஞ்சங்களில் இடம் பிடித்தது. அதே மாதிரி இப்படமும் உருவாகிறது. இதில் என்னுடன் நடிகர் பரத் முக்கிய கேரக்டரில் தோன்றுகிறார்," என்றார்.

ஏப்ரல் 14-ல் அஜீத்தின் பில்லா 2!




Ajith Kumar and Parvathy Omanakuttan
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் ஷூட்டிங் 100 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

மங்காத்தா ரிலீசுக்கு முன்பே, எப்போது தொடங்கியது என்று வெளியில் தெரியாத அளவுக்கு ஆரம்பித்தது பில்லா 2 ஷூட்டிங். விசாகப்பட்டிணத்தில் ஆரம்பித்து, பல பகுதிகளில் விறுவிறுவென படப்பிடிப்பை நடத்தி கிட்டத்தட்ட முடித்தே விட்டனர் இப்போது.

மொத்தம் 93 நாட்கள் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது. 5 நாட்கள் பேட்ச் ஒர்க் நடக்க உள்ளது. ஆக ஷூட்டிங் தொடர்பான வேலைகளுக்கு மொத்தம் 100 நாட்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையில், சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை இந்துஜா குழுமத்தின் இன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான ஸ்டில்கள் பொங்கலன்று வெளியாகும், ட்ரெயிலர் பிப்ரவரியில் வெளியாகும் என்று இந்துஜா குழுமத்தின் சுனில் கேத்ரபால் தெரிவித்துள்ளார்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஏப்ரலில் படம் வெளியாகும் என்றும் இயக்குநர் சக்ரி டோலெட்டி கூறியுள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, ஏ எம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்திலும், விஜயா புரொடக்ஷன்ஸின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் அஜீத்.