Thursday, January 26, 2012

28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமிதாப்புடன் இந்திப் படத்தில் ரஜினி!



Rajini and Amitabh

அமிதாப் பச்சனுடன் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திப் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். பூரி ஜெகன்னாத் இந்தப் படத்தை இயக்கப் போகிறார்.

28 ஆண்டுகளுக்கு முன்பு ராமாராவ் தயாரித்த அந்தா கானூன் படம்தான் இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் இணைந்து நடித்த கடைசி இந்திப் படமாகும்.

இதுகுறித்து பூரி ஜெகன்னாத் கூறுகையில், சமீபத்தில் நான் ரஜினி சாரை சந்தித்துப் பேசினேன். அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்கப் போகும் புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். உடனே அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

மேலும் அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் பரவசமாக உள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு இணைந்து நடிப்பதால் ஏற்பட்ட பரவசம் இது.

நீண்ட காலமாகவே ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. முயற்சித்தும் கொண்டிருந்தேன். ஆனால் இப்போதுதான் கை கூடியுள்ளது. அதேசமயம், இரு பெரும் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மலைப்பாகவும் உள்ளது என்றார் ஜெகன்னாத்.

ஏற்கனவே அமிதாப்பச்சனை வைத்து புத் ஹோகா தேரா பாப் என்ற படத்தை சமீபத்தில் இயக்கியவர்தான் பூரி ஜெகன்னாத் என்பது நினைவிருக்கலாம்.